சனத் ஜெயசூர்யா: தோற்றுப்போன சாதனையாளன்!


சனத் ஜெயசூர்யாவின் 42வது பிறந்த தினம் இன்று. 2 நாட்களுக்கு முன்னர் வரை இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கட் ஆடியவர். இலங்கை அணி, 1996ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணம் பெற முக்கிய காரணமாய் அமைந்தவர். மாத்தறை மாவட்டத்திலிருந்து அதிக விருப்பு வாக்குகள் பெற்ற அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர். இப்படி பல அறிமுகங்களுக்கு சொந்தக்காரர் சனத்!

இலங்கை கிரிக்கட் வரலாற்றை முரளியும்- சனத்தும் இன்றி எழுதிவிட முடியாது. அதிக பக்கங்களை இவர்கள் இருவருமே எடுத்துக்கொள்வார்கள். கடந்த வருடம் இதே காலப்பகுதியில் முரளி டெஸ்ட் போட்டிகளிலிருந்து 800 விக்கட்டுக்கள் பெற்று ஓய்வுபெற்றிருந்தார். சனத்தும் தன்னுடைய 22 வருட சர்வதேச கிரிக்கட் வாழ்க்கையை விருப்பமின்றி நேற்றுமுன்தினம் முடித்துக்கொண்டார் அல்லது முடித்துக்கொள்ள அறிவுத்தப்பட்டார்.

ஒரு பொக்ஷிங்டேயில், அதாவது 1989 டிசம்பர் 26ஆம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னுடைய சர்வதேச கிரிக்கட்டை 20 வயது சனத் ஜெயசூர்யா ஆரம்பிக்கிறார். அந்தப் போட்டியில் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கிறார். இலங்கை அணி 30 ஓட்டங்களினால் தோற்றுப்போகிறது. அப்போது, யாரும் நினைக்கவில்லை சனத் கிரிக்கட்டின் பலதுறைகளிலும் சாதனைகளை தன்னகத்தே கொண்டுவரப்போகிறார் என்று!

ஒருநாள் கிரிக்கட்டின் ஆரம்ப அதிரடி ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய தேர்வுக்குழு தலைவருமான சிறிகாந்த் ஆரம்பித்து வைத்தார். ஆனாலும், அதனை பலமடங்கு உயர்த்திக்காட்டி பலரையும் தன்னுடைய ஆட்ட தன்மையை பின்தொடர வைத்த பெருமை சனத்துக்கு உண்டு. அதுவும், களுவிதாரண என்கிற சக வீரருடன் அவரின் ஆரம்ப துடுப்பாட்டம் கிளாசிக் ரகம்.

என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் 22 வருடங்கள் சர்வதேச கிரிக்கட் ஆடியவர்கள் சனத்தும்- சச்சினும் மட்டுமே. சச்சின் இன்னும் 2 ஆண்டுகளாவது சர்வதேச கிரிக்கட்டில் நிலைத்திருப்பார் என்று நினைக்கிறேன். இவர்கள் இருவரிலும், ஒருநாள் ஆட்டங்களில் ‘மச் வின்னர்’ என்ற சொல்லுக்கு சச்சினைவிட, சனத்தே பொருத்தமானவர். ஓட்டங்கள்- விக்கட்டுக்கள் என்று தொடர்ந்தும் சகலதுறை வீரராக வலம் வந்தவர். டெஸ்ட் ஆட்டங்களில் சச்சினை, சனத்தினால் எந்தக்காலத்திலும் நெருங்கக்கூட முடியவில்லை.

இப்படி, இலங்கை அணியினை பல தருணங்களில் தனியொரு வீரராக தோளில் சுமந்த சனத் ஜெயசூர்யா இறுதி 4- 5 வருடங்களில் நடந்து கொண்ட விதம், அவரின் சாதனைகளை மறக்க வைத்துவிட்டது. 42 வயதான சனத் ஜெயசூர்யா ஆரம்ப வீரராக ஆடுகிறார். அதே அணியில் 21 வயது டினேஸ் சந்திமால் உதிரி வீரராக ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

‘கனவான்’ வீரர்கள் தங்களுடைய ஆட்டத்திறன் ஓரளவு குறைகின்றது என்று தெரிகிறபோதே ஓய்வுபெற்று இளம் வீரர்களுக்கு வழிவிடுவதே அவர்களுக்கும்- அணிக்கும் நல்லது. அதனைவிடுத்து, ஓய்வுபெற மாட்டேன் என்று அடம்பிடிப்பது புதிய வீரரொருவருக்கான இடத்தை பிடித்துக்கொண்டிருப்பதாகவே அர்த்தப்படும். அதனையே, சனத் இறுதி 5 வருடங்களில் செய்து கொண்டிருந்தார். இதனால், பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உள்ளூர் ஆட்டங்களில் சிறப்பாக தொடர்ந்தும் செயற்பட்ட ஜீவன் மென்டிஸ் தன்னுடைய சர்வதேச கிரிக்கட் அறிமுகத்தை 28 வயதில் மேற்கொள்ள வேண்டிய நிலையெல்லாம், சில சிரேஸ்ட வீரர்களின் அடம்பிடிப்புக்களினாலும் நிகழ்கிறது. இது சின்ன உதாரணம் மட்டுமே. சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கு இளம் வீரர்களுக்கு அனுபவம் அவசியமாகிறது. அதனைப்புரிந்து கொண்டு சிரேஸ்ட வீரர்கள் செயற்படுவதும் முக்கியமானது. ஆனால், அதனை சனத் அதிக தருணங்களில் நிறைவேற்றவில்லை.

டெஸ்ட் ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆடியது வரலாறு. அதுபோல, 15 மாதங்களுக்கும் அதிக காலம் சர்வதேச போட்டிகள் எதிலும் ஆடாத அவர், அரசியலுக்கு சென்ற தருணத்திலாவது சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஒதுங்கியிருக்கவேண்டும். அதனையும் செய்யாமல், மீண்டுமொரு சர்வதேசப் போட்டியிலேயே ஓய்வுபெறும் அறிவிப்பை வெளியிடுவேன் என்று அடம்பிடிப்பது ஒரு சாதனை வீரனுக்கு அழகல்லவே.

இலங்கையில் மட்டுமல்ல கிரிக்கட் விளையாடப்படும் அனைத்து நாடுகளிலும் சனத்தின் அதிரடி ஆட்டத்தினை பின்பற்றுபவர்கள் பலர் இருக்கின்றனர். கிரிக்கட்டில் ஆர்வமின்றியிருந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான சிறுவர்களை (1996இல் சிறுவன்) அதன்பக்கம் ஈர்த்த பெருமை அவருக்குண்டு. ஆனால், அவர் இறுதிக் காலங்களில் நடந்து கொண்ட விதம் அவரின் மீதான மரியாதையை குறைக்கவே செய்தது.

சனத் ஜெயசூர்யா அவர்களே….! நீங்கள் சாதனை வீரர்தான். ஆனால், இறுதிக் காலங்களில் தோற்றுப்போய்விட்டீர்கள். எதுஎப்படியோ, குடும்ப வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள். ஏனெனில், அரசியலில் உங்களினால் நிலைத்து நிற்க முடியாது என்று நம்புகிறேன்!!

வாய்ப்பற்ற நடிகர்களின் முதுகு சொறிதலும், ஈழ அக்கறையும்!


சித்தி, செல்வி, அரசி என்று பல பெயர்களில்- வேடங்களில் இலங்கையில் இரவு 8.30க்கு தொலைக்காட்சி வழியாக வந்து அழுது, ஆத்திரப்பட்டு, தியாகச் செம்மலாக(?) வாழ்ந்து காட்டுபவர் நடிகை ராதிகா சரத்குமார். இவருக்கும் இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. ராதிகாவின் தாய்வீடும் இலங்கை!

இலங்கையிருக்கின்ற தமிழ் மக்கள் அதிக வருத்தமும், வலிகளையும் வாங்கிக்கொண்டது 2007- 2009 காலப்பகுதி. இதே காலப்பகுதியில், தன்னுடைய தொழில்முறை மற்றும் நட்புமுறை பயணங்களை நடிகை ராதிகா, தன்னுடைய கணவரும்- தென்னிந்திர திரைப்பட நடிகர்கள் சங்க தலைவருமான சரத்குமாருடன் இணைந்து மேற்கொண்டிருந்தார்.

அப்போதெல்லாம், சிரச மற்றும் சக்தி தொலைக்காட்சிகளில் அவர்கள் பங்குபற்றிய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்புக் செய்யப்பட்டன. சிரச தொலைக்காட்சியின் நேரடி நிகழ்ச்சியொன்றில் நடிகை ராதிகா அழகான சிங்களத்தில் பேசிக்கொண்டிருந்ததையும் பார்த்திருக்கிறேன். அதேகாலப்பகுதியில் கிளிநொச்சியிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.

மேற்சொன்னது ஒரு தகவலுக்காக. இனி விடயத்துக்கு வருவோம்.

‘ஈழத்தில் நடந்திருக்கிற மனிதாபிமானமற்ற கொலைகளைக் கண்டித்து’ இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும். அதனை, வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் போராட்டம் நடத்தும். அதுவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், “இலங்கையின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்” என்று அறிவித்த சில நாட்களேயான நிலையில் அவசர அவசரமாக வந்திருக்கின்றது நடிகர் சங்கத்தின் அறிவிப்பு.

இந்த அறிவிப்பு, பல அரைக்கிறுக்கு ஈழ ஆதரவாளர்களை குளிர்வித்திருக்கும். ஆனால், ஈழத்திலுள்ள தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருக்கின்ற உறவுகளுக்கு இதுவொன்றும் மகிழ்ச்சியை கொடுத்துவிடாது என்று நம்புகின்றேன். ஏனெனில், ஈழத்தில் இன்னும் தமிழ் மக்கள் எஞ்சியிருக்கிறார்கள். இந்தியா விதிக்கின்ற பொருளாதாரத்தடை அந்த மக்களையும் சேர்த்தே பாதிக்கும். அதுதவிரவும், அவர்களில் குறிப்பிட்டளவானோர் ஏதோவொரு வகையில் இந்தியாவுடன் தொழில்முறை உறவைப் பேணுபவர்கள். அவர்களும் நிர்க்கதியாகவேண்டி வரும்.

போராட்டத்தினை நடத்துவதற்கு முன்னர் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?. அந்த போராட்டத்தின் தன்மை என்ன? கோரிக்கைகள் எப்படிப்பட்டது? அதனால், ஏற்படும் விளைவுகள் என்ன? என்றெல்லாம் யோசித்து மக்களின் பாதிப்பை அதிகளவில் தவிர்த்து முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமே பயனுள்ளதாக அமையும். அதனைவிடுத்து, ஆட்சியிலுள்ளவர்களுக்கு அவசரமாக குடை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக எந்தவித யோசனைகளுமின்றி முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தினால் எந்தப் பயனும் விளைந்துவிடாது. பல தருணங்களில் விளைவுகள் பாரதூரமாக இருக்கும்.

ஈழத்தில் கொத்துக்கொத்தாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது தன்னுடைய தொழில் விருத்தி குறித்து சிந்தித்து செயற்பட்ட நடிகை ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் எங்கிருந்து ஈழத்தமிழர்கள் மீது இவ்வளவு பாசம் வந்தது. அதுதவிரவும், தமிழக அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல நடிகர்களுக்கும் தங்களை வளப்படுத்திக்கொள்ள ஈழமும், ஈழத்தமிழர்களும் தேவைப்படுகிறார்கள். அதற்காக, அதிகப்படியானவர்கள் போலிப் பாசத்தை காட்டுகிறார்கள். உண்மை நிலையை அறிந்து போராடும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

‘நடிக்க பெரிதா வாய்ப்புக்கள் வரவில்லை. தங்களுடைய கதாநாயக பிம்பம் கலைக்கிறது’ என்ற பயம் பல நடிகர்களுக்கு வருவது இயல்புதான். எப்போதும், எல்லா நடிகர்களையும் மக்கள் கொண்டாடுவதில்லை. அதற்காக, உங்களை நிலைநிறுத்திக்கொள்ள ஈழமும், ஈழமக்களும் என்ன போடுதடியா?! பெரிய திரையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், இருக்கவேயிருக்கிறது 1008 தொலைக்காட்சிகள். அங்கு ஏதாவது தொடர்களில் முகத்தை காட்ட வேண்டியதுதானே?!

நடிகர் சரத்குமார் அவர்களே………..! தமிழகத்தில் ஆட்சிமாற்றங்கள் ஏற்படுகின்ற போது, மு. கருணாநிதி- ஜெயலலிதா ஜெயராம் இருவரில் யார் முதல்வராகிறரோ அவர்களுக்கு பாராட்டு விழாவை நடத்துவீர்கள். அந்தவிழாவில் காலில் விழுந்து, வாய் வலிக்க, நாக்கு கூச புகழ்ந்து தள்ளுவீர்கள். அதுதானே, வாடிக்கை. அதனைவிடுத்து, ஏன் ஈழத்தமிழர்கள் மீது இந்த யோசனைகளற்ற அக்கறை. ஈழ மக்களின் மீது நீங்கள் கொள்ளும் பாசமிருக்கிறதே. அது எங்களை மெய்சிலிருக்க வைக்கிறது!

உங்களது அரசியலுக்கு எங்களை ஊறுகாயாக பாவிக்காதீர்கள். தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வருபவர்கள் நாங்கள். எங்களை விட்டுவிடுங்கள்!!

இந்தப் போர் எங்களோடு ஆரம்பிக்கவும் இல்லை! முடியவும் இல்லை!!


இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் என்றும் மறக்க முடியாதவர்களில் பகத் சிங் முக்கியமானவர். மகாத்மா காந்தியின் அஹிம்சை வழிப்போராட்டங்களில் சிறிது காலம் பயணப்பட்டு, நாட்டின் விடுதலைக்கு ஆயுத போராட்டமே சிறந்தது என்று தன்னுடைய 19 வயதில் தீர்மானித்து அதற்குள் தன்னை புகுத்திக்கொண்ட இளம் சிங்கம்.

பிரித்தானிய ஆட்சியாளர்களாலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அஹிம்சை வாதிகளினாலும் உற்றுநோக்கப்பட்டவர். தன்னுடைய 24 வயதுக்குள்ளேயே வாழ்க்கையை நாட்டுக்காக முடித்துக்கொண்டவர். அவரே, “இந்தப் போர் எங்களோடு ஆரம்பிக்கவும் இல்லை. முடியவும் இல்லை” என்று தன்னுடைய நண்பர்களிடம் கூறினார்.

பகத் சிங்கின் இந்த கூற்று ஆயுத போராட்டத்துக்கு மட்டுமல்ல, அஹிம்சை வழியிலான போராட்டங்களுக்கும் பொருந்தும். ஓவ்வொரு தனி மனிதனும், சமூகமும், இனமும் ஏன் முழு உலகமுமே போராடிக்கொண்டு தான் இருக்கிறன. என்ன அவரவரின் தேவைகளும், நோக்கங்களுமே வேறுபடுகின்றன.

இலங்கையில் சுமார் முப்பது வருடங்களாக நடைபெற்று வந்த ஆயுத வழியிலான போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. (அப்படித்தானே கூறப்படுகிறது) இந்த நிலையில், இலங்கை தமிழர்கள் என்னென்ன காரணங்களை முன்வைத்து போராட்டங்களை ஆரம்பித்தார்களே அந்த காரணங்கள் மட்டும் அப்படியே எந்தவித தீர்வுமின்றி இருக்கின்றன.

இந்தியா என்ற பெரிய நாட்டை உருவாக்கிய பிரித்தானியாவே, இலங்கை என்ற நாட்டையும் உருவாக்கியது. தன்னுடைய காலணித்துவ ஆட்டிசிக்காலத்தில் நிர்வாக கட்டமைப்பை உறுதி செய்யவே பல்வேறு ஆட்சியாளர்களை கொண்டிருந்த இந்துஸ்தானத்தை இந்தியாவாக்கினார். அதுவே, இலங்கையிலும் நடந்தது.

அதுவரை பக்கத்து ஆட்சியாளர்களிடம் மோதிக்கொண்டிருந்த மன்னர்களுக்கும், குறுநில அரசர்களுக்கும், மேற்கு மெஹலாயர்களுக்கும், கிழக்கு வங்காளிகளுக்கும், வடக்கு ஆரியனுக்கும், தெற்கு திராவிடனுக்கும் ‘பிரித்தானிய ஆட்சியாளர்கள்’ பொது எதிரியாயினர்.

அதனால், தங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை மறந்து விட்டு போராட்டங்களுக்குள் தங்களை இந்தியனாக உருமாற்றி புகுந்து கொண்டனர். அதுவே, ஈழத்திலும் சாத்தியமானது.

கண்டி சிங்களவனும், கரையோர சிங்களவனும், வடக்கு தமிழனும், கிழக்கு இஸ்லாமிய தமிழனும், கொழும்பு தமிழனும் ஏன் மலே சகோதரனும் தங்களை ஒரு தாய் மக்களாக நினைத்து ஒன்றினைந்து பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக போரிட்டனர். ஆனால். இந்தியாவிலும், இலங்கையிலும் இன்றைய நிலை என்ன?

இலங்கையில் தமிழர்களும் (இங்கு இஸ்லாமியர்களும் உள்ளடக்கப்படுகிறார்கள்), இந்தியாவில் அசாம், மேஹாலயா, அருணாச்சல் பிரதேசம், காஸ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களிலுள்ள மக்களும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது உரிமைகள் வேண்டி போராடுகின்றனர்.

இலங்கைத் தமிழர்கள் சந்தித்த கொடுமைகளையும், ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளையும் இந்திய எல்லையோர மாறில மக்கள் அதுவும், காஸ்மீர், அசாம், அருணாச்சல் பிரதேச மக்கள் தினம் தினம் அனுபவிக்கிறார்கள். ஆனால், இலங்கை தமிழர்களின் போராட்டங்கள் உலகளவில் உற்று நோக்கப்பட்ட அளவுக்கு அவை பார்க்கப்படவில்லை என்பதும் உண்மை.

ஜனநாயக மறுப்புக்களும், மனித உரிமை மீறல்களும் இந்த பிரதேசங்களிலும் தொடர்கின்றன. ‘பயங்கரவாத தடைச் சட்டத்தினால்’ இலங்கை சிறுபான்மை மக்கள் எவ்வளவு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனரோ, அதைவிட இந்திய எல்லையோர மாநில மக்கள் பயங்கர இராணுவ சட்டங்களை தினம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இலங்கையில் இராணுவ குற்றங்கள் மக்கள் மீது எவ்வாறு நீண்டு சென்றுள்ளதோ, அதுபோலவே இந்திய சிறுபான்மை சமூகங்கள் மீதும் அவ்வப்போது பாய்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? நாட்டின் ஆட்சியாளர்களாக இருக்கின்ற பெரும்பான்மையினர், சிறுபான்மையினரின் உரிமைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளமையே.

இந்த புரிந்து கொள்ளாமை, நூறு வருடங்களல்ல ஆயிரம் வருடங்களானாலும் தொடரப்போகிறது. சின்ன உதாரணமொன்று வடக்கில் தங்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழர்கள், இஸ்லாமிய தமிழர்களை அவர்களின் பாராம்பரிய நிலங்களிலிருந்து விரட்டவில்லையா? இதுவெல்லாம் மறக்கவும், மன்னிக்கவும் முடியாதவை.

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களுக்கு தங்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு அவ்வப்போது சின்னதாக வழிகள் பிறக்கின்றன. அதில், தேர்தல்கள் முக்கியமானவை. சிறுபான்மைச் சமூகத்தின் மீது என்றைக்கும் இல்லாத பாசம், தேர்தல் காலங்களில் பெரும்பான்மை அரசியல்வாதிளுக்கு வரும்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுபான்மை சமூகம் தங்களுடைய உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாகவேனும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சரியான முறையில் பயன்படுத்தினால் மறுக்கப்படுகின்ற உரிமைகளை பெறுவதற்கு வழிகள் ஓரளவுக்கு உண்டு.

அதை விடுத்து ஒட்டுமொத்தமாக தங்களுக்கு அதிகாரத்தையும், உரிமைகளையும் பெரும்பான்மை சமூகம் வழங்குமென்று காத்திருப்பது வெற்றுக் கனவே. இந்த நிலை, எங்கெல்லாம் தங்களின் உரிமைகளுக்காக போராடுகின்றார்களோ அங்கெல்லாம் பொருத்தி பார்க்கலாம். அதுதான், ‘இந்தப் போர் எங்களோடு ஆரம்பிக்கவும் இல்லை! முடியவும் இல்லை!!’ புரிந்து கொண்டால் சரி.

(இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியான 2010 ஜனவரியில் ‘ஞாயிறு தினக்குரல்’ பத்திரிகையின் ‘அரசியல் களரி’ பக்கத்தில் இந்த கட்டுரை பிரசுரமாகியது. சில திருத்தங்களுடன் இங்கு மீள்பதிவாக)

ஈழம்: இந்தியா: போராட்டம்.

Posted in | 7 comments

‘180’ ஆயிரம் காதல்களில் ஒன்று! ஆனாலும், அழகு!!


நித்யா மேனனின் சீரான பல்வரிசை, சுருள்சுருளான கேசம், அந்த வட்ட முகம். இதுவெல்லாம் எனக்கு நெருக்கமாக இருந்த- இருக்கின்ற யாரையோ ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அது, யாரென்பதை பின்மூளை சொல்வதில் பின்நிற்கிறது. சித்தார்த் நடித்து வெளியாகியிருக்கிற ‘180’ படத்தினை நேற்று பார்த்த கணத்திலிருந்து இந்த பிரச்சினை தொடர்கிறது!

சரி, என் சொந்தப் பிரச்சினையை விட்டுவிட்டு படத்தைப் பற்றி கொஞ்சம் பேசலாம். இந்தியச் சினிமாவில் மட்டுமல்ல, உலகம் பூராவும் எங்கெல்லாம் சினிமா எடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஒரு கதை ஆயிரம் தடவைகளுக்கு மேல் சினிமாவாக எடுக்கப்படுமென்றால் அது ‘முக்கோணக் காதல் கதை’யாகத் தான் இருக்கும்!

சித்தார்த், பிரியா ஆனந்த், நித்யா மேனன் நடித்து ஜெயந்திரா இயக்கத்தில் வெளியாகியிருக்கிற 180வும் முக்கோணக் காதல் கதையே. ஆனால், இந்த முக்கோணத்தில் இரு பக்கங்கள் சந்திக்கவேயில்லை. (அப்படியாயின் எப்படி முக்கோணமாகும் என்ற கேள்வி தவிர்க்க முடியாததுதான்). இயக்குனர் கே.வி. ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்களான சுபா இரட்டையர்களுடன் இணைந்து இயக்குனர் ஜெயந்திரா கதை- திரைக்கதையை எழுதியிருக்கிறார். அதனால், ‘கோ’வின் சில காட்சிகள் ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது.

படத்தின் கதையை விலாவாரியாகப் பேச பெரிதாக ஒன்றுமில்லை. அதனால், படத்தின் சில அழகான விடயங்கள் பற்றியும், அனுபவம் பற்றியும் பேசலாம். ‘நாளை’யை முற்றாக அறிந்தவன் வாழ்வு வெறுமையாகிவிடும். அதனால், நாளை மீதான எதிர்பார்ப்புள்ள வாழ்க்கையே அனைவருக்கும் சுவாரஸ்யமாக இருக்கும்.

அதுபோல, நாங்கள் நேசிக்கின்ற வாழ்க்கையை வாழ எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. பல காரணங்களினால் அவற்றை பெரும்பான்மையானோர் செய்வதில்லை. எனக்கு கண்காணாத தேசமொன்றில் நான் நினைக்கின்ற மாதிரி வாழ வேண்டும் என்கிற ஆசை!, அந்த நினைப்பு அவ்வப்போது எழும், ஆனாலும், உறவுகளும்- சமூகமும் வந்து அதன்மீது ஏறி அமர்ந்துகொள்ளும். அந்த பாரத்தில் என் ஆசை உறங்கிவிடும்.

நானும்- நெருங்கிய நண்பரொருவரும் மூன்று வருடங்களுக்கு முன்னர் ‘ஹொம் டிலிவறி’ முறையில் தோசை விநியோகிக்கும் தோசைக் கடை நடத்த விரும்பினோம். அது பல காரணங்களினால் நடக்கவில்லை. ஆனால், எங்களின் ஐடியாவை பெற்றுக்கொண்டு என்னுடைய உறவினரொருவர் வெற்றிகரமாக தோசைக் கடை நடத்தினார். சில வாரங்களுக்குள் நல்ல வருமானத்துடன், பல வகை தோசைகளை அறிமுப்படுத்தினார். அவர் இப்போது, கனடாவில் விருந்தினர் விடுதியொன்று நடத்துகிறார். அங்கும் தோசை போடுகிறார்!

சில பெண்களிடமுள்ள விசேட குணவியல்புகள் அவர்களை எங்களுக்கு என்றைக்கும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும். 180ல் வரும் பிரியா ஆனந்தின் கதாபாத்திரமும் அப்படி விசேட இயல்புகள் கொண்டது. ஆனாலும், அந்த புகைப்படக்கலைஞராக வரும் நித்யா மேனனும், அவரின் கதாபாத்திரமும் அதிகம் பார்க்க- நினைக்க வைத்திருக்கிறது. சித்தார்த், இன்னும் 10 வருசத்துக்க இப்படியே அழகான பையனாக இருப்பார் என்று நினைக்கிறேன். நடிக்கவும் செய்கிறார்.

அழகாக காதல் கதைகளைப் பார்த்து பல நாட்களாகிறது என்று அண்மையில் ஆதங்கப்பட்டுக் கொண்டேன். அதனை, 180 ஓரளவுக்கு பூர்த்தி செய்திருக்கிறது. அதுவும் சித்தார்த், பிரியா ஆனந்தின் நெஞ்சில் ஸ்தொஸ்கோப்பை வைத்து சோதிக்கும் போது அவருக்கு கேட்கின்ற ‘புது வெள்ளை மழை பொழிகிறது’ பாடலின் இசை அற்புதம்!

நூற்றெண்பது, 50 வீதம் தேனாக இனிக்கிறது. 25 வீதம் உப்பாக கசக்கிறது. மீதி 25 சுகர் பிறி சுகராக இருக்கிறது. உலக- யதார்த்த சினிமா ரசிகர்களுக்கு இது பிடிக்காது. எல்லா வகைச் சினிமாக்களையும் ரசிக்கிற என்னைப் போன்றவர்களுக்கு காதலை காதலாக பேசியிருக்கிற 180, நல்ல பொழுதுபோக்குப்படம்.

காதலனும்- காதலியும் சந்திக்கின்ற தருணங்களில் மட்டுமல்ல, கணவன்- மனைவிக்கிடையிலும் அதிக நேரம் வாய் வலிக்க பேசிக்கொள்ளதென்னவோ பெண்கள்தான் போலும். நேற்று படம் பார்க்கையில் எனக்கு பின்னாலுள்ள இருக்கையில் ஒரு கணவனும், மனைவியும் அமர்ந்திருந்தனர். படம் ஆரம்பித்திலிருந்து, அந்த மனைவி தொண தொணவென்று பேசிகொண்டேயிருந்தார்.

அதுவும், பத்திரிகைகளிலும்- இணையத்தளங்களிலும் கிடைக்கிற சினிமா செய்திகள் பற்றி அடித்து விட்டுக்கொண்டிருந்ததார். பாவமய்யா அந்த மனுசன், எல்லாத்துக்கும் தலையை ஆட்டிக்கொண்டேயிருந்தார். எனக்கு, கடுப்பாகிவிட்டது. படத்தின் இடைவேளையில் நண்பனொருவன் தொலைபேசியில் அழைக்க, அவனுடன் பேசும்போது பின்னாலுள்ளவர்கள் குறித்து சாடைமாடையாக கொஞ்சம் நக்கலாகப் பேசிவிட்டேன். அதற்குப் பிறகு, அந்தப் பெண் வாயோ திறக்கவில்லை. படம் பார்க்கப் போனாலும் ஆயிரம் அவஸ்தை!!

அப்பாவிப்பெண்கள்: அந்தரங்கத்தின் ஆபத்து: மயக்கும் இசை!

அப்பாவிப் பெண்கள்!

உலகம் முழுவதும் மோதல்களை யாரோ திட்டமிடுகிறார்கள், யாரோ நடத்துகிறார்கள். ஆனால், அதிகம் பாதிக்கப்படுவதென்னவோ பெண்களும், குழந்தைகளும்தான். இதனை, மோதலின் கோரங்களைப் பார்த்த ஈழத்தமிழனாக என்னால் எப்போதும் சொல்ல முடியும். உலக விதவைகள் தினம் நேற்று (யூன் 23) நினைவுகூரப்பட்டது. ‘கணவனையிழந்த பெண்களின் வாழ்க்கை பல சமூகங்களில் முன்னகர்த்தப்படுவதே இல்லை.’ என்ற வருத்தத்துடன் சில பகிர்தல்கள்.

இயற்கை அனர்த்தங்களினாலும், மோதல்களினாலும் உலகம் பூராவும் மில்லியன் கணக்கான பெண்கள் கணவனை இழந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களில் 75 வீதமான பெண்கள் குடும்பங்களை தலைமை தாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர். ஆபிரிக்காவின் இருண்ட நாடுகளான சோமாலியா, ருவண்டா, எத்தியோப்பியா என்று பல நாடுகளில் அதிகளவிலான கணவனை இழந்த பெண்கள் இருக்கின்றார்கள். அத்துடன், மத்தியகிழக்கின் ஈராக்- ஆப்கானிஸ்தான் போன்றனவும் இவற்றுக்கு முக்கிய உதாரணங்கள்.

வளச்சுரண்டாலுக்காகவும், அதிகார நிறுவுகைக்காகவும் யாரோ திட்டமிடுகின்ற மோதல்களுக்குள் அப்பாவிப் பெண்களின் கணவன்கள் பலியாகிப் போகிறார்கள். விளைவு, அந்த நாடுகளில் நிர்க்கதியான சமூகமொன்று தொடர்ந்தும் கட்டமைக்கப்படுகின்றது. இந்தச் சமூகம் பொருளாதார- கல்வி- சமூக அபிவிருத்தியின்றி எடுப்பார் கைப்பிள்ளையாகின்றது. மீண்டும் சுரண்டப்படுபவர்களாகவே இருக்க தலைப்படுகிறார்கள்.

உலகம் பூராவுமுள்ள கணவனையிழந்தவர்களில் இயற்கை அனர்த்தங்களினால், கணவனை இழந்த பெண்கள் 10 வீதத்துக்கும் குறைவாகவே இருப்பார்கள். மோதல்கள்- வன்முறைகள் என்ற பாரிய விஷத்தினாலேயே அதிகளவானோர் பாதிப்படுகின்றனர்.

இலங்கையில், 120,000க்கும் அதிகளவான பெண்கள் கணவனை இழந்தவர்களாக இருக்கலாம். அதில், குறிப்பாக வடக்கு- கிழக்கில் 90,000க்கும் அதிகமானோர் இருப்பதாக இலங்கை அரசின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. குடும்பத்தின் பொருளாதாரத்தினை மட்டுமல்லாமல், கட்டுமானத்தையும் இந்தப் பெண்களில் அதிகமானோரே மேற்கொள்ள வேண்டிய சூழலுள்ளது. இந்த பெண்களில் அதிகளவானோர் அதிகம் படித்தவர்கள் அல்ல என்ற நிதர்சனமும் கொஞ்சம் உறைக்கிறது!!

ஆபத்தில் அந்தரங்கம்!


சிலவேளைகளில் உங்களின் படுக்கையறை அல்லது குளியலறை வீடியோ இணைப்பும் உங்களின் மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கப்படலாம். அப்போது, நீங்கள் மற்றவர்களின் அந்தரங்கத்தை ஆராய்ந்த போது இருந்த ஆர்வம், அப்படியோ முற்றுமுழுதாக வேறொரு தாக்கத்தை உங்களுக்கு வழங்கலாம். ஆகவே, எங்கேயும் அவதானமாக இருங்கள்.

உலகின் தொழிநுட்ப வளர்ச்சி அதிக தருணங்களில் நன்மையை மாத்திரம் தந்துவிடுவதில்லை. அதற்கு இணையமும் நல்லதொரு உதாரணம். தகவல் பரிமாற்றத்தின் உச்சபட்ட திறனை வெளிப்படுத்துகின்ற இணையமே, பல விடயங்களில் தலையிடியாகவும் போய்விடுகிறது. சாரு யாரோ ஒரு பெண்ணுடன் (அந்தக்கணக்கு போலியாகவும் இருக்கலாம்) பேஸ்புக் அரட்டையில் ஈடுபட்ட விடயமே, அண்மைய நாட்களில் தமிழ் இணைய சூழலில் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றது. அதுபோல, ‘கதவைத திற காற்று வரட்டும்’ என்று சொன்னவரின் படுக்கையறைக்குள்ளேயே கமரா போனது வரலாறு!

எனவே, உங்களின் அந்தரங்கங்க இயக்கங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். அறையின் எந்த மூலைக்குள் கமரா ஒளிந்திருக்கிறதோ தெரியாது. அதுபோல, இணைய அரட்டை, தொலைபேசி அரட்டை என்று அதிகம் காலத்தைப் போக்குபவர்களே, அதிலும், ஆயிரம் போலிகள் இருக்கிறார்கள். அந்தபோலிகள், உங்களை அம்மணமாக்கி அம்பலப்படுத்திவிடுவார்கள். ரொம்ப கவனம்.

கறுப்பு- வெள்ளை காலத்தில் நடிகை மார்லின் மன்றோவின் படுக்கையறை வீடியோவும், அண்மைக் காலத்தில் நடிகை பாரிஸ் ஹில்டனின் இயக்க வீடியோவும் மில்லியன் டொலர்களுக்கு விற்பனையாகியது வரலாறு. நாளைக்கு உங்களின் வீடியோவும் சில டொலர்களுக்காவது யாரோ ஒருவரால் விற்கப்படலாம். ஆகவே, அவதானமாக இருங்கள்! நான் ரொம்பவும் அவதானமாக இருக்க முயல்கிறேன்!!

மயக்கும் இசை!

தமிழ் திரையிசைப் பாடல்களை பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் கொண்டுவந்த பெருமை கவியரசு கண்ணதாசனுக்கு உண்டு. அதுபோல, தமிழ் திரையிசை வரலாற்றில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் முக்கிய இடமுண்டு. அந்த இரண்டு கலைஞர்களுடைய பிறந்த தினம் இன்று. கண்ணதாசன், எம்.எஸ்.வி. கூட்டணியில் நான் அதிகம் ரசித்த பாடல் “பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு…..”. இந்தப் பாடலின் வரிகள் நாங்கள் எங்கிருந்தாலும் அவ்வளவு பொருத்தமானதாக இருக்கும். ரி.எம்.எஸ்சின் குரலில் ஒலிக்கும் பாடலுக்கு, ‘சூரியகாந்தி’ படத்தில் வாயசைத்து நடித்திருப்பார் கவியரசு கண்ணதாசன்!!

சில வருடங்களுக்கு முன்னே போன் செக்ஸ் பற்றி பேசிய சாருவின் ஸீரோ டிகிரி


எது நல்ல இலக்கியம், எது நல்ல எழுத்து என்பதில் எனக்கு நீண்ட நாட்களாக (மூன்று, நான்கு வருடங்களாக) கேள்விகள் உண்டு. பலரால் நல்ல எழுத்து என்று சொல்லப்படுபவை சிலரினால் மிக மோசமாக விமர்சிக்கப்படுகின்றன. அதுபோல வெளிநாட்டு இலக்கியங்கள் சிலவற்றுடன் ஒப்பிட்டு கொண்டாடப்படுகின்ற சில இலக்கியங்கள் மொழிதிறனும், ஆபாசமும், வக்கிரமும், வியாக்கியானங்களும் நிறைந்தவை என்று புறந்தள்ளப்பட்டு விடுகின்றன. இவ்வாறான நிலையில் எது நல்ல இலக்கியம், எது சிறந்த எழுத்து என்பதில் என்னுடைய கேள்விகள் விடையின்றி தொடர்கின்றன.

என்ன இது? எடுத்தவுடனேயே இலக்கியம், நல்ல எழுத்துக்கள் என்று மிகவும் காத்திரமான விடயங்களை பேசுகிறானே என்று யோசிக்க வேண்டாம். இந்த பதிவில் அண்மையில் வாசித்த சாரு நிவேதிதாவின் ‘ஸீரோ டிகிரி’ குறித்தே என்னுடைய மன ஓட்டங்களை இங்கே பதிவு செய்கிறேன். இது விமர்சனமாகவோ, குற்றச்சாட்டுக்களாகவோ, ஆதரவாகவோ யாராவது எடுத்துக்கொண்டால் அது குறித்து நான் அலட்டிக் கொள்ளமாட்டேன்.

தமிழக எழுத்துலகில் ‘நிர்வாண எழுத்தாளன்’ என்று பலரினால் அடையாளப்படுத்தப்பட்ட சாரு நிவேதிதாவை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கிடைத்தது. ‘ஓம் சாந்தி ஓம்’ திரைப்படம் குறித்த கட்டுரையை சாருவின் வலைமனையில் படித்திருக்கிறேன். அதிலிருந்து அடிக்கடி சாருவின் வலைமனையை வாசித்து வந்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியான அவரது கட்டுரைத் தொகுப்பான ‘தப்புத்தாளங்கள்’ வாசித்திருக்கிறேன். அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நண்பர் வந்தியத்தேவன் என்கிற மயூரன் அவர்கள் என்னிடம் தந்த ‘ஸீரோ டிகிரி’ படித்தேன்.

ஆசைகள், விருப்பங்கள், வெறுப்புக்கள், பாலியல் தேவைகள், காம வேட்கைகள், உணர்வுகள் என்று ஒவ்வொருவரின் ஆழ் மனதிலும் இருக்கின்ற அனைத்தையும் வெளிப்படுத்தினால் அல்லது தேடிக்கொள்ளும் போது எம்மை ‘மனிதன்’ என்ற வரையறுக்குள் இருந்து விலக்கி ‘மிருகம்’ அல்லது அதற்கு கீழான நிலைக்கு வைத்துவிடும். முனியாண்டி, சூர்யா, பக்ருனிஸா, திப்தி, இன்னும் இன்னும் பல பெயர்களில் சாரு என்கிற மனிதன் தன்னையும், சமூகத்தையும் ‘ஸீரோ டிகிரி’யில் வெளிப்படுத்தியிருக்கின்றான். அதில் ஆபாசங்களும், விரசங்களும் அதிகமாக தெரியலாம். ஆனால், அது எம்முடைய ஆழ்மனதில் அவ்வாறு தெரிவதில்லை.

சாருவின் எண்ணங்களும், அனுபவங்களும் கட்டுரைகள், கவிதைகள், கடிதங்கள் என்று பல வடிவங்களில் ‘ஸீரோ டிகிரி’யில் பதியப்பட்டிருக்கிறது. அது நாவலா? அல்லது பல எழுத்துக்களின் தொகுப்பா என்று வாசித்த எனக்கு தெரியவில்லை. சிலவேளை அது சாருவுக்கும் தோன்றியிருக்கலாம். ஆனால், ‘ஸீரோ டிகிரி’யில் என்னால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத பல விடயங்கள் உண்டு. யாரை நோக்கி ஸீரோ டிகிரி எழுதப்பட்டுள்ளதாக சாரு குறிப்பிட்டுள்ளாரோ அதில் அரைவாசிக்கும் அதிகமானோரால் அது புரிந்துகொள்ளப்படமாட்டாது. அதற்குள் நானும் அடங்கலாம்.

படைப்பு ஒன்று யாருக்காக அளிக்கப்படுகிறது என்று படைப்பாளியே தீர்மானிக்கிறான். ஆனால், அந்த படைப்பை வெற்றியாக்குவது என்னவோ வாசகனோ, வாசகியோதானே. அது புரிந்து கொள்ளப்பட்டு ‘ஸீரோ டிகிரி’ பல இடங்களில் எழுதப்படவில்லை என்பது என்னுடைய கருத்து. அதற்கு சாருவின் வெளிநாட்டு இலக்கியங்கள் மீதான அளவு கடந்த பாசமாகவும் இருக்கலாம். ஆனால், அந்த பாசத்தினை தமிழ் மொழிக்குள் கொண்டு வரும் பொழுது அதீத அக்கறை கொள்ளவேண்டும். அப்பொழுது அவரது படைப்புக்கள் இன்னும் இன்னும் வாசகர்களையும், வாசகிகளையும் பெற்றுக்கொள்ளும். சாருவின் தீவிர ரசிகனான என்னை நான் ஒருபோதும் வைத்துக்கொண்டதில்லை. ஆனாலும், அவரது சிறுகதைத் தொகுப்பான ‘மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்’ வாசிக்க திட்டமிட்டுள்ளேன். அது எப்போது என்று எனக்கு தெரியாது.

(சாருவைச் சுற்றி சர்ச்சைகள் அதிகரித்துள்ள இந்தநிலையில், ஸீரோ டிகிரி பற்றி 2009 நடுப்பகுதியில் எழுதப்பட்ட பதிவு, மீண்டும் ஒரு பகிர்தலுக்காக.)

பிரபாகரனின் மனைவி- பிள்ளைகள் சர்ச்சை: ஊழலில் சிறிலங்கா கிரிக்கட்!


பிரபாகரனின் மனைவி- பிள்ளைகள்!

“சமஸ்கிருதம்“தான் கணனிக்கு பொருத்தமான மொழி என்று கண்டுபிடித்துச் சொன்ன சுப்ரமணியசுவாமி போல, இலங்கை- இந்திய அரசியலில் எப்போதுமே பல கோமாளிகள் இருந்து வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட கோமாளிகள் இல்லாத அரசியலை நினைத்துப் பார்ப்பது அவ்வளவு நல்லாயிருக்காது. ஏனெனில், அவர்களின் கொள்கைகள்- கோட்பாடுகள் தாண்டி, அவர்களின் இராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களை பல தருணங்களில் அதிசயிக்க(?) வைக்கும்.

மேற்குறிப்பிட்ட ஆரம்பத்திற்கும் இனிவரும் விடயத்துக்கும் சம்பந்தமில்லை. சம்பந்தப்படுத்திப் பார்த்தாலும் நான் பொறுப்பாளி அல்ல.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி- பிள்ளைகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பேணிப்பாராமரித்து வருவதாக, இலங்கை ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல கிரிக்கட் வர்ணனையாளருமான(?) ஏ.எச்.எம் அஸ்வர், நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்தார்.

இந்தச் செய்தியில் உண்மையிருக்கும் பட்சத்தில் நான் மிகவும் சந்தோசப்படுவேன். எந்தவொரு உயிரும் பலிவாங்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டதாக அறிவித்த அரசாங்கம், அந்த மோதல்களின் போது பிரபாகரனின் மனைவி- பிள்ளைகள் உயிரிழந்திருக்கலாம் என்ற செய்தியை அப்போது வெளியிட்டிருந்தது.

ஆனால், அந்தச் செய்திகளை இரண்டு வருடங்கள் கழித்து அதே அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மறுத்துரைத்திருக்கின்றார். இந்த குழப்பங்களுக்குப் பின்னாலுள்ள உண்மை எது? என்று அறிவிக்க வேண்டிய கடப்பாடும் அதே அரசாங்கத்துக்கு இருக்கின்றது. பிரபாகரனின் மனைவியும், பிள்ளைகளும் உயிரோடு இருக்கும் பட்சத்தில் அவர்களை சதாரண வாழ்க்கைக்கு அனுமதிக்க வேண்டும்.

ஏனெனில், முன்னாள் போராளிகளுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுதலை வழங்குவதாக கூறுகின்ற அரசாங்கத்துக்கு, இதனையும் செய்ய முடியும் என்றே நினைக்கின்றேன்!. இல்லாவிட்டால், பிரபாகரனின் மனைவி- பிள்ளைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் வெளியிட்ட கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு இந்த சர்சைகளுக்கு முடிவு கட்டப்படுமா?! இலங்கை அரசியலில் எல்லா வியாக்கியானங்களும், விண்ணத்தணங்களும் எப்போதுமே சாத்தியம்!!

பலிகடவாகும் வீரர்கள், தப்பிக்க நினைக்கும் சிறிலங்கா கிரிக்கட்!

நிர்வாகத்திறைமையற்றவர்கள் தலைமை வகிக்கின்ற எந்த நிறுவனமும் சிறப்பாகச் செயற்பட முடியாது. அப்படிப்பட்டவர்களுடன், ஊழல் பேர்வழிகளும் சேர்ந்தால் குறித்த நிறுவனத்தின் நிலை எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். இதற்கு அண்மைக்கால உதாரணம் சிறிலங்கா கிரிக்கட். பில்லியன்களில் கடன், மில்லியன்களில் ஊழல், ஊக்கமருந்து சிக்கல் என்று எங்கு திரும்பினாலும் சிக்கலுடன் இருக்கின்றது சிறிலங்கா கிரிக்கட்.

உலகக் கிண்ணக் கிரிக்கட் இறுதிப்போட்டியில் இலங்கை தோல்வியடைந்த்தைத் தொடர்ந்து வதந்திகளும்- ஊகங்களும் அதிகரித்த தருணத்தில் அணித்தலைவர், உதவித்தலைவர், தேர்வுக்குழுவினர் மட்டுமல்ல அணியின் பேரூந்து ஓட்டுனரும் இராஜினாமச் செய்ய ஊகங்கள் உர்ஜிதமாகிய தோற்றத்தைத் தந்தன. இதற்குப் பின்னால், சிறிலங்கா கிரிக்கட் பற்றி வெளிவந்த செய்திகளில் அதிகமானவை அதன் ஊழல்கள்- சீரற்ற நிர்வாகம் குறித்தே இருந்தது.

உலகக் கிண்ண இறுதிப் போட்டி பரிசளிப்பு விழாவில் ஈலியந்த வைட் என்கிற வைத்தியருக்கும்(?) நன்றிகள் என்று சங்ககார குறிப்பிட்டிருந்தார். யார் இந்த ஈலியந்த வைட்? அறிந்து கொள்ள நண்பர் றிசான் ஷெரிப் எழுதிய “அரசமாளிகை ஊக்க மருத்துவர் என்கிற பதிவை வாசியுங்கள். பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்படாத வைத்தியரொருவரை சர்வதேச அணியொன்றின் மருத்துவத்தேவைகளை கவனித்துக்கொள்ள சிறிலங்கா கிரிக்கட் அனுமதித்துள்ளது. காரணத்தைக் கோரினால், “அணித்தலைவர் சங்ககார எழுத்துவடிவில் கோரினார்“ என்று சிறிலங்கா கிரிக்கட்டின் செயலர் நிஷாந்த ரணதுங்க பதிலளிக்கின்றார். இந்தப் பதிலில் எவ்வளவு பொறுப்பற்ற தன்மை தெரிகின்றது. அதுதவிரவும், தங்களின் பிழைகளை இலகுவாக மற்றவர்களின் மீது சுமத்திவிட்டு விலகிவிட நினைக்கின்றனர்.

அந்த ஊக்க மருத்துவரின் சிகிச்கையின் பலனாக மாட்டிக்கொண்டுள்ள உபுல் தரங்கவின் கிரிக்கட் எதிர்காலம் எப்படியிருக்கும், அத்துடன் தங்களை நோக்கி வீசப்பட்ட பந்தை சங்காவின் பக்கம் திருப்பிவிட்டு தப்பிக்க நினைக்கின்றனர் சிறிலங்கா கிரிக்கட்டின் அதிகாரிகள். அதுவும், அவர்கள் ஊடகவியலாளர் மாநாடுகளில் வழங்குகின்ற பதில்கள் சிறுபிள்ளைத் தனமானதாகவே இருக்கின்றது. அணித்தலைவர் கோரியதால் நாங்கள் வழங்கினோம் என்றால் ஏன் நிர்வாகிகள்?!

அதுதவிரவும், எதிர்வரும் இரண்டு வருடங்கள் புதிய வீரர்களைக் கொண்டு இலங்கை கிரிக்கட் அணி மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது. “மச்வின்னர்“ முரளி இல்லாத இடத்தில் புதிய வீரர்கள் தேவைப்படுகின்றார்கள். அதுதவிரவும், சங்கா, மஹெல, மலிங்க இல்லாத இலங்கை அணி இரண்டாம் தர அணியாகவே இருக்கும். விரும்பியோ- விரும்பாவிட்டாலோ மூவரும் அணியினை விட்டு விலகும் காலம் நெருங்கிவிட்டதாக தெரிகிறது. புதிய வீரர்களை நம்பிக்கையுடன் ஆட அனுமதியுங்கள். மீண்டும் முரளியும்- சங்காங்களும் கிடைப்பார்கள்.

தொலைந்த காதலியைத் தேடி: IN THE CITY OF SYLVIA.


விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கை முழுவதும் சினிமா எங்களுடனேயே பயணிக்க ஆரம்பித்துவிட்டது. அதில், குறிப்பிட்ட சிலபடங்கள் ஏதோவொரு வகையில் எம்மை அதிகமாக பாதிக்கும். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பார்த்து தன்னுடைய காதலை நினைத்துப் பார்த்தவரும், ‘நாடோடிகள்’ பார்த்து நண்பனின் நெருக்கத்தை தேடியவனும் எம்மிடையே இருக்கலாம்.

அதுபோல, சில படங்கள் எம்முடைய மனதை சலனங்கள் இன்றி சீர்படுத்தவும் செய்கின்றன. அதற்கு அண்மையில் பார்த்த IN THE CITY OF SYLVIA நல்லதொரு உதாரணம். படமென்றால், சிரிப்பும், அதிரடியும், பாட்டும், சென்டிமென்டும் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படம் சிறிதும் பொருத்தமில்லாதது.

ஒவ்வொரு மனிதனுக்கும் தேடல்கள் உண்டு. அதுபோல ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதுக்கும் தேடல்கள் உண்டு. ஆழ்மன தேடல்கள் குறித்து 95 வீதத்துக்கும் அதிகமானவர்கள் வெளிப்படுத்திக்கொள்வதில்லை. அவற்றை தேடி செல்கின்றவர்களை துறவிகள், சாமிகள், சித்தர்கள், நாடோடிகள், கிறுக்கர்கள், பைத்தியக்காரர்கள் என்றெல்லாம் அழைக்க கேட்டிருக்கிறோம். அவ்வாறான ஆழ்மன தேடல்கள் கொண்ட இளைஞன் ஒருவரின் தேடலே ‘IN THE CITY OF SYLVIA’.

ஆறு வருடங்களுக்கு முன்னர் சந்தித்த (அழகிய) பெண்ணை தேடி ஓர் ஓவியத் திறைமை கொண்ட இளைஞன் இத்தாலியின் சில்வியா நகருக்கு செல்கின்றான். அவனுடைய மூன்று நாள் வாழ்க்கையே ‘IN THE CITY OF SYLVIA'. ஸ்பானிய மொழி திரைப்படம். 2007ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தினை திரைக்கதை ஆசிரியரும், இயக்குனருமான Jose Luis Guerin இயக்கியிருக்கிறார்.

சில்வியா நகரிலுள்ள உணவு விடுதியொன்றின் வாடிக்கையாளர்களும், பராமரிப்பு பெண்ணும், வீதிகளும், தொடரூந்தும், ஓவியனும், அழகிய சில பெண்களுமே படத்தின் கதாபாத்திரங்கள். 84 நிமிடங்கள் மட்டுமே கொண்ட இந்தப்படத்தினை பார்ப்பதுக்கொண்டிருந்த எனக்கு தியானத்தில் இருந்த உணர்வு ஏற்பட்டது.

பெயர், முகவரி தெரியாத, அதுவும் ஆறு வருடங்களுக்கு முன்னர் ஓர் கண்காட்சியில் சந்தித்து உரையாடிய பெண்ணைத் தேடி எந்தவொரு தகவலும் இல்லாமல் ஒரு பெரிய நகரத்துக்கு செல்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அந்த விடயத்தில் ஆத்மார்த்தமாக செயற்படுகின்றான் அந்த ஓவிய இளைஞன். அவனின் தேடல் முடிந்ததா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு வார்த்தைகளின், வசனங்களின், பேரிரைச்சல்களின் அலட்டல் இன்றி விடை சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்தினை தனியையில் எந்தவொரு இடையூறுகளுமின்றி பார்க்கிறபோது வானத்தில் மிதக்கின்ற மாதிரியாக, மனது லேசானதான உணரமுடிந்தது.

ரயிலிலோ, பஸ்சிலோ பயணிக்கின்ற போது எத்தனை நபர்களை (குறிப்பாக இங்கு இளம் பெண்கள் என்று பொருத்தி பார்க்கவும்) பார்க்கின்றோம். அவர்களில் சிலரை ஏற்கனவே பார்த்தது போல உணர்வோம். அவர்களிடம் சென்று பேசலாமா வேண்டாமா என்று எல்லாம் மனதில் கேள்விகள் எழும். ஆனாலும், அதிகமானோர் அவர்களிடம் பேசுவதில்லை.

பயணத்தை முடித்து நடக்கையில் யார் அவர்? பேசியிருக்கலாமோ? என்ற கேள்விகள் தொக்கி நீக்கும். மீண்டும் எமது வேலைகளில் மூழ்கும் போது அவை மறந்து போகும். இவ்வாறே பெரும்பாலானோரின் வாழ்க்கை செல்கிறது. அந்த அச்சவுணர்வை நீக்கி தைரியமாக பேசியிருக்கும் சந்தர்ப்பந்தில் சில வேளைகளில் எமது வாழ்க்கை பயணத்தில் மாற்றங்கள் கூட ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கும்.

இதுவொரு உதாரணம் மட்டுமே…! வாழ்க்கையின் மாற்றங்களை புறச்சூழல் மாத்திரமின்றி, சில தருணங்களில் ஆழ்மன தேடல்களும் தீர்மானிக்கின்றன. நிகழ்வுகளின் சடுதியான மாற்றங்கள் தானோ வாழ்க்கை!!



(2009 ஆகஸ்ட் 11ம் திகதி எழுதியது, சில திருத்தங்களுடன் மீள்பதிவாக)

புலத்திலிருக்கும் தமிழன்: முதல் ஹீரோ: இலங்கை அப்பாக்களுக்கு!

புலத்திலிருக்கும் தமிழன்!



விரும்பியோ விரும்பாமலோ சில விடயங்களை பேசவும், ஏற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. தமிழ் மக்களின் (ஆயுத) விடுதலைப் போராட்டம் வானளவில் வளர்ந்து, முள்ளிவாய்க்கால் கடலுக்கடியில் மக்கி மண்ணாகிப் போனமை வரை புலம்பெயர்ந்த தமிழனின் பங்கு முக்கியமானது. ஈழத்தமிழனின் வரலாறு எழுதப்படும் போது, புலம்பெயர் சமூகம் பெரிய அத்தியாயத்தைப் பிடித்துக்கொள்ளும்.

உடலை வருத்துகின்ற குளிர்நாடுகளின் விடுதிகளில் உணவு பரிமாறியும், தட்டுக்கழுவியும் சம்பாதித்த பணத்தின் குறிப்பிட்ட பகுதியை ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களில் அநேகர் ஏதோவொரு நம்பிக்கையில் விடுதலைப் போராட்டத்திற்கு என்று கோராப்பட்ட போதெல்லாம் வழங்கியிருக்கின்றனர். அது, இன்றும் சில நாடுகளில் தொடர்கிறது.

புலத்திலிருக்கும் உறவுகளை நோக்கி ஒரு சில கோரிக்கைகளை மாத்திரம் முன்வைக்க முடியும். ஏனெனில், விடுதலைப் போராட்டத்துக்கு என்று வசூலிக்கப்பட்ட பணத்தின் பெரும்பகுதி ‘கறுப்பாடு’களின் வங்கிக்கணக்குகளில் உறங்குகிறது. அதுதவிரவும், வடக்கு- கிழக்கிலிருக்கின்ற மக்களுக்கு என்று கோராப்படுகின்ற பணத்தை கொண்டு உதவி வழங்கும் நிறுவனங்கள் கூட, பெரியளவில் ஒன்றும் செய்துவிட முடியாத நிலையே இங்கு இருக்கின்றது. ஆட்சியாளர்களும் அதனை விரும்பவில்லை.

மோதல்களின் முழுமையான வலிகளையும் வாங்கியிருக்கும் எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக புலத்திலிருக்கின்ற உறவுகள் உதவி வழங்க விரும்பினால், தனிப்பட்ட ரீதியில் உதவுகள். அதாவது, பொருளாதார வசதியற்ற ஒரு மாணவனின் கல்விச் செலவுகளை முழுமையாக பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். மாதாமாதம் அதற்கு பெரிய தொகையும் தேவைப்படாது. அல்லது, தொழில் முயற்சிகளுக்கு உதவுங்கள். இவ்வாறான உதவிகள் வன்னிக்குள்ளும்- கிழக்கிலும் தேவைப்படுகின்றன.

அதுதவிரவும், முன்னாள் போராளிகளின் வாழ்க்கைத் தரத்தை முன்னகர்த்துவதற்கும் உதவலாம். ஒருகாலத்தில் ஹீரோக்களாக கருதப்பட்ட அவர்கள், தற்போது அதே சமூகத்தினால் ஒதுக்கப்படுகின்ற சூழ்நிலையே அதிகம் காணப்படுகின்றது. நான் எப்போதும் வேண்டுவது, உதவிகளைச் செய்யக்கூடிய நிலையிலிருக்கின்ற புலம்பெயர் உறவுகள் யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்படுங்கள். அதுவே, அனைவருக்கும் நல்லது!

முதல் ஹீரோ!


என் ஆளுமையில் மட்டுமல்ல, உடல்மொழியிலும் தாக்கம் செலுத்துகின்ற அப்பாவுக்கு….! முதன்முதலில்; தோளில் அமரவைத்து உலகத்தை காட்டிய, கைபிடித்து கதைபேசிய நண்பன்- ஹீரோ எல்லாமே நீங்கள் தான்! நல்ல அப்பாக்களுக்கு வாழ்த்துக்கள்!! இது, தந்தையர் தினத்தை முன்னிட்டு பேஸ்புக்கில் நேற்று நான் இட்ட கருத்துரையின் திருத்திய வடிவம்.

அன்னையர்தினம், தந்தையர்தினம், காதலர் தினம் என்று ஆயிரத்தெட்டு தினங்களை வருடம் முழுவதிலும் கொண்டாடுகின்றனர். இதில், பல வியாபார நோக்கங்களுக்காகவே கொண்டாடப்படுகின்றன. ஆனாலும், விரைவான உலகில் இவ்வாறான சில தினங்கள் எங்களை ஏதோவொரு தருணத்தில் கொஞ்சமாவது சிந்திக்க வைக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

ஆண்- பெண் என்று வித்தியாசமின்றி பிள்ளைகளில் 90 வீதமானோர் தங்களின் தாய்மாருடனேயே விருப்பு- வெறுப்புக்களை தயக்கமின்றி பகிர்ந்து கொள்கின்றனர். ஆனாலும், பிள்ளைகளின் வளர்ச்சியிலும், ஆளுமையிலும் அன்னைக்கு ஈடாக தந்தையரும் தாக்கம் செலுத்தியே வருகின்றனர். எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என்னுடைய தந்தையாரே பல விடயங்களின் எனக்கு முன்னுதாரணமா இருக்கின்றார்.

தந்தை- மகன் உறவைத் தாண்டி நண்பனாக பல விடயங்களை விவாதிக்கவும், மனம் விட்டு பேசிக்கொள்ளவும் முடிகிறது. தொழில் நிமிர்த்தம் கடந்த பத்து ஆண்டுகளாக அவர் வெளிநாடொன்றில் இருக்கின்றார். வாரத்தில் இருதடவைகளாவது பேசிக்கொள்வோம். அந்தப் பேச்சுக்களில் குடும்ப விசயங்கள் பெறும் முக்கியத்துவத்தை- பொது விடயங்களும் பெற்றுக்கொள்கின்றன.

அவரிடத்திலுள்ள சில குறைபாடுகளை நேரடியாக சுட்டிக்காட்டினாலும், சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்ளுவார். இங்கே அப்பா- மகன் என்ற ஈகோவும் வருவதில்லை. அதனாலேயே, பலருடன் ஈகோ என்கிற உணர்வைத் தாண்டி பழக முடிகிறது. மிஸ்டர் தங்கமயில் கந்தையா..! நீங்கள் என்னுடைய ஹீரோ!. அதுதவிரவும், நல்ல தந்தையாக எதிர்காலத்தில் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கும் நீங்கள்தான் முன்னுதாரணம்.

நேற்றைய தந்தையர் தினத்தில் என்னை மிகவும் பாதித்த பதிவொன்றை நண்பர் அனுதினன், இலங்கை அப்பாக்களுக்கு!!” என்ற தலைப்பில் எழுதியிருந்தார். பதிவை, வாசித்த பின்னர் அனுதினனின் தந்தையை தாண்டி, தாயாரே அதிகம் ஞாபகத்துக்கு வந்தார். கலகலவென்று பேசும் அந்த தாயின் கையினால் சாப்பிட்டிருக்கிறேன். அந்த கலகலப்புக்குப் பின்னால், பயங்கர வலியிருக்கிறது. அனுதினனும்- அம்மாவும் ஈழத்திலிருக்கிற உறவிழந்த ஆயிரக்கணக்கானோருக்கு சாட்சி!!