'அங்க்' விஜயகாந்த்; நெளிந்த கத்திக்குள்ளும் துரு!


அங்க்....! என்றால் விஜயகாந்த். ‘கலக்கப்போவது யாரு’ வகையறா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வருகைக்குப் பின்னார் நடிகர்களை அடையாளப்படுத்த சில சத்தங்களே போதுமாக இருக்கிறது. 'அக்கா ஆஆஆஆ' என்ற நடிகர் சண்முகசுந்தரத்திற்கான அடையாளத்துக்குப் பிறகு 'அங்க்' நான் அதிகம் ரசித்தது நகைச்சுவைக்காக.

சிவந்த கண்களும், கைகள் அசைக்கப்படும் போது அவற்றுக்குள் இருக்கிற கொடுக்கல் வாங்கலும் (கிட்டத்தட்ட பிரேக் அடித்து நிற்பது மாதிரியான) அவரின் மிகப்பிரபலமான(?) உடல்மொழி. சின்னக்கவுண்டர் என்கிற வெற்றிபெற்ற படத்தினை தொலைக்காட்சியில் பார்த்த காலத்திலேயே விஜயகாந்த் அறிமுகமாகிறார். அதற்கு முன்னார் தீபாவளி காலத்து வாழ்த்து அட்டைகளிலேயே நதியா, ராதிகா, விஜயகாந்த் உள்ளிட்டவர்களை பார்த்திருக்கிறேன். இது 1990களில்.

2000க்கு பின்னரே பாகிஸ்தான் தீவிரவாதிகளை தமிழில் வேட்டையாடிய விஜயகாந்தை காண நேர்ந்தது. அவரின் ‘எங்கள் அண்ணா’ எனக்கு நிறையப் பிடிக்கும். இயக்குனர் சித்திக்கின் தொடர்ச்சியான நகைச்சுவைக் காட்சிகளுக்காக. நமீதா என்கிற மறுக்க முடியாத தமிழ் சினிமா வரலாறும்(?) அந்தப் படத்தில்தான் எழுதப்பட்டது.

இவற்றையெல்லாம் தாண்டி விஜயகாந்த் என்னுடைய கவனத்தை பெற ஆரம்பித்தது அவரின் அரசியல் பிரவேச காலத்தில். சரி- பிழைகளைத் தாண்டி அரசியலில் தனித்து இறங்கிய துணிச்சல் எனக்கு எப்பவும் பிடிக்கும். ரஜினி என்கிற தோற்றுப்போன அரசியல் கனவு இப்போதும் அதை விட்டு வெளியில் வராமலும், துணிச்சலாக முடிவெடுக்க முடியாமலும் இருக்கிற போது விஜயகாந்த், என்னை ஆச்சர்யமூட்டினார். கறுப்பு எம்.ஜீ.ஆர். என்கிற எரிச்சலூட்டலைத் தாண்டி!

2006 காலப்பகுதியில் விஜயகாந்தின் கட்சி முதல் சட்டமன்ற தேர்தலில் ஒரு வெற்றியை மட்டும் பெற்றுக்கொண்டதையும் என்னால் குறைவாகப் பாக்க முடியவில்லை. ஜெயலலிதாவின் முன்னைய ஆட்சிக்காலத்தில் இலட்சக்கணக்கான கடைநிலை ஊழியர்கள் பதவியிலிருந்து துரத்தப்பட்டது. அடாவடியான அரசியல் முடிவுகளின் மூலம் மக்களை அல்லல் படுத்தியது என்று அ.தி.மு.க.விற்கான அதிர்வு அதிகரித்தே இருந்தது. குறித்த அரசியல் அதிர்வு தி.மு.க- காங்கிரஸ் என்கிற கூட்டணிக்கு சாதகமாகவே இருந்தது.

அப்படியிருக்க விஜயகாந்த் என்கிற தனி மனிதருக்கான வெற்றியாகவே விருதகிரி இருந்தது. அந்த வெற்றியின் ஆரம்பம் மிகச்சரியான முடிவொன்றுடன் எதிர்க்கட்சி தலைவர் என்கிற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. 'ஜனநாயகம்' என்கிற பெயரில் தெற்காசிய நாடுகளில் நடைபெறுகின்ற ஆட்சிகளில் அநேகமானவை மன்னாராட்சிக்கு நிகரானவைதான். என்ன, மன்னர் காலத்தில் சண்டைகளில் வெற்றிகொண்டு ஆட்சியைப் பிடிக்க வேண்டியிருந்தது. இப்போது மக்களை துரத்திப்பிடித்து காலில் விழுந்து ஆட்சியைப் பிடித்த பின்னர், சகல வல்லமையுமுள்ள ஆட்சியாளர்களாக வலம்வர முடிகிறது. இவற்றை கொஞ்சம் அசைத்துப்பார்க்க நீதித்துறை இருந்தாலும், அவற்றுக்கும் பணமும்- பலமும் அதிகம் மரியாதை செலுத்துவதில்லை.

தமிழக சட்ட மன்றத்தில் நேற்று (01 பெப்ரவரி 2012) நடைபெற்ற தமிழக முதல்வருக்கும்- எதிர்க்கட்சித் தலைவருக்குமான விவாதம் மிகப்பெரியளவில் ஊடகங்களினாலும், சமூகத்தளங்களினாலும் பார்க்கப்படுகிறது. எனக்கு தெரிந்தளவில் குறித்த விவாதத்தில் அவ்வளவு முக்கியமான விடயங்கள் பேசப்படவில்லை. அதுபோக, அவ்வளவு சுவாரஸ்யமாகவும் இல்லை. ஜெயலலிதா தன்னுடைய திமிரான நக்கலையும்- அதற்கு பதிலாக விஜயகாந்த் நாக்கு கடித்து தெளிவற்ற குழறிய பதிலையுமே தெரிவித்தார்.

நம்மூரில் “போனால் வருவீரோ. வந்தால் இருப்பீரோ“ என்று பாடல் பாடி நக்கல் பண்ணும் அளவுக்கும், “செங்கோலை“ கொண்டு மறைத்து வைத்து கண்ணாமூச்சி விளையாடுமளவுக்கும் ஜனநாயகம்(?) இருக்கிறது. அதுபோக, கை நீட்டிப் பேசுவெதெல்லாம் சர்வ சாதாரணம். அப்படியிருக்க கை நீட்டிப் பேசினார் என்பதற்காக விஜயகாந்தை சபாநாயகர் அவையை விட்டு நீக்கியது மிகப்பெரிய விடயமே?. அதுபோக, ஜெயலலிதாவும் கை நீட்டியே பேசினார். அதனை, கௌரவ சபாநாயகர் கண்டுகொள்ளவேயில்லையே? தமிழக சட்டமன்ற 'ஒழுக்க கோவை' முதல்வர் கை நீட்டிப் பேச அனுமதிக்கிறதா?

விஜயகாந்த் என்பவர் நெளிந்த கத்திதான். கொள்கைகள், கோட்பாடுகள், திட்டங்கள் போட்டு ஆட்சிய நடத்திய தமிழக அரசாங்கங்கள் தமிழக மக்களை ஒன்றும் மிகப்பெரியளவில் வளர்ச்சியடைய வைத்துவிட வில்லை. வேண்டுமானால் கொடாநாடுகளும்- ஜெயண்டுகளும்- நிதிகளும் வளர்ந்து கோலொச்சியிருக்கலாம். கடைநிலையில் இருக்கிற குப்புசாமியோ- முனியம்மாவோ அல்ல. அப்படியிருக்க கேப்டனுக்கும் தன்னை வளர்த்து அவரின் தலைமுறைகளுக்கு உழைக்க உரிமை இல்லையா?

மக்களைப் பற்றிப் பேசாதா திமிர் தனங்களை காட்டும் அரசியலுக்கு இவ்வளவு ஆதரவா? உங்களின் ஜனநாயகமும்- ஊடக தொழில் தர்மமும் வியக்க வைக்கிறது! இறுதியில் ஜெயலலிதாவின் திமிரும்- கேப்டனின் 'அங்க்'ம் தான் மிஞ்சும்!!

நண்பனுக்கு பின் ரொக்ஸ்டார்; தேவையற்ற ரீமேக்!


ரஜினி திரையில் சிரிக்கிறார்; இவனும் சிரிக்கிறான். ரஜினி கோபப்படுகிறார்; இவனுக்கும் நெஞ்சு வெடவெடக்கிறது. ரஜினி சிறிதேவியை கட்டியணைக்கிறார்; இவனுக்கும் யாரையோ அணைத்த நினைப்பு. இறுதியில் ரஜினி வில்லனை அடித்து துவைத்து வெற்றிகொள்கிறார்; இவனும் யாரையோ வெற்றிகொண்ட (பழிவாங்கிய) உணர்வு. இப்படியான உணர்வை தரவல்லது சினிமா!

எங்களுக்கு கிடைக்காத வாழ்க்கையையும வாழ்ந்து பார்த்துவிட்ட சின்ன திருப்தியையும் சினிமா தருகிறது. பலரின் காதல்களும்- கல்யாணங்களும் சினிமாவுக்குள்ளேயே கரைந்து போய்விடுகின்றன. யதார்த்த உலகில் வேறு மாதிரியான வாழ்க்கை. போட்டிபோட்டு ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.

இப்படித்தான் எங்களின் சமூகமும் தனக்கென ஒரு வரையறையை கட்டமைத்து வைத்திருக்கிறது. சுய விருப்பு- வெறுப்பு- இலக்கு எல்லாம் இங்கு அவ்வளவு கணக்கெடுக்கப்படுவதில்லை. பலநேரங்களில் பலருக்கு சூன்யமாக வாழ்க்கையே மிஞ்சிப்போகிறது.

சில படங்கள்தான் எங்களையும் ஹீரோவாக உணர வைத்து தன்னுள் சேர்த்துக்கொளளும். அண்மைக்காலத்தில் நான் அப்படியுணர்ந்த படங்கள் அமீர்கானின் தாரே ஷமின் பார் மற்றும் இம்தியாஸ் அலியின் ரொக்ஸ்டார் த்ரிஇடியட்ஸ்சும் அதன் தமிழ்பதிப்பு நண்பனும் கூட அப்படியொரு உணர்வை குறிப்பிட்டளவு தந்தது.

ஒரு இசைக்கலைஞனின் தேடலும், காதலும், பலமும், பலவீனமும் தான் ரொக்ஸ்டார். அதித கற்பனைகளுடன் அலையும் விட்டுக்கொடுப்புக்கள் செய்யாத கலைஞனின் கதை. நல்ல இசைக்கு தன்னுள் மெல்ல மெல்ல இழுத்து உச்ச ரசனையை வழங்கி எங்களை விடுவிக்கும் புள்ளியில் ஒரு உச்ச இன்பத்தை கொடுக்கும் வல்லமை உண்டு. கிட்டத்தட்ட காதலியுடனான காமம் தரும் நிறைவு போன்றது. அந்த உணர்வை எனக்குத் தந்தது ரொக்ஸ்டார்.

காதலித்தாலும், கோபப்பட்டாலும், இசைத்தாலும், அழுதாலும் அதன் எல்லையை தொட்டுவிட வேண்டிய கலைஞனாக படம் நெடுகிலும் நடித்திருக்கிறார் ரண்பீர் கபூர். சஞ்சய் லீலா பன்சாலியின் சாவரியாவில் அறிமுகமாகியதிலிருந்து, அவ்வப்போது வியக்க வைத்தவர். ரொக்ஸ்டாரில் ரண்பீர் கபூரைத் தவிர வேறுயாரையும் அந்த பாத்திரத்துக்கு நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு தன்னை அர்ப்பணித்திருக்கிறார். நிச்சயமாகச் சொல்ல முடியும் இந்தியாவின் நல்ல நடிகர்களில் ரண்பீரும் ஒருவர்.

இசை பற்றிய படத்தில் இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான். படம் நெடுகிலும் இசையும் காதலும், காதலும் இசையும் என்று மாறிமாறி வருகிறது, உருக வைக்கும் அழவுக்கு. எனக்கு பரிச்சயமில்லாத கலாசாரம். இதற்கு முன் அவ்வளவு கேட்டிராத இசை. ஆனாலும், என்னை படத்துக்குள்ளேயே கட்டிப்போட்டு வெளிவர விடாமல் செய்திருக்கிறார் ஏஆர்ஆர்.

ஜப் வி மெற் என்றொரு இம்தியாஸ் அலி எடுத்த நல்ல படம் வந்தது. அந்தப் படத்தினை கண்டேன் காதல் என்கிற பெயரில் தமிழிலும் எடுத்திருந்தார்கள். அதுவும், தமன்னாவை அரைக்கிறுக்கு பெண் வேடத்தில் நடிக்க வைத்திருப்பார்கள். படம் பார்த்ததும் அவ்வளவு எரிச்சல் ஏற்பட்டது. நல்ல படங்கள் ரீமேக் பண்ணப்பட வேண்டியதுதான். ஆனாலும், மூலத்தின் குறிப்பிட்டளவு ஜீவனையாவது ரீமேக்க வேண்டும்.

ஜப் வீ மெற்றின் மட்டரகமான ரீமேக்கிய வடிவம் தான் கண்டேண் காதல். ஜப் வீ மெற்றில் கரீனா கபூரின் பாத்திரத்தில் துள்ளல் இருக்கும். நகைச்சுவை இருக்கும். அதுபோல, புத்திசாலித்தனமும் இருக்கும். அரைக்கிறுக்கு தனத்தை அது வெளிப்படுத்தியிருக்காது. கத்திமுனையில் நடப்பது போன்ற பாத்திரம் அது. ஆனால், தமன்னாவை அரைக்கிறுக்காகவே காட்டியிருப்பார் இயக்குனர் கண்ணன். அண்மைக்காலத்தில் புளுதி படர்ந்த ரீமேக்கிற்கு நல்ல உதாரணம் ஒஸ்தி. என்ன காட்டுக்கத்தல்?!

ஜப் வீ மெற் போன்ற உணர்வுகளுக்கிடையிலான சிக்கல்களைச் சொல்லும் படங்களையே இம்தியாஸ் அலி எடுத்திருக்கிறார். அதனையும் அச்சொட்டான நேர்த்தியுடன். அந்த வரிசையின் அவரின் மிகச்சிறந்த படைப்பு ரொக்ஸ்டார். படத்தின் வெற்றி தோல்விககு அப்பால் மிகச்சிறந்த படத்தைக் கொடுக்க முனைந்திருக்கிறார். அதில், குறிப்பிட்டளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ரொக் ஸ்டார் சிறந்த விமர்சனங்களை மட்டுமல்ல; விருதுகளையும் மேடைகளில் குவித்து வருகிறது. சில வேற்று மொழிப் படத்தைப் பார்த்தால் தமிழில் ரீமேக்கப்பட வேண்டும் என்ற ஆசை வரும். ரொக்ஸ்டார் எனக்கு அந்த ஆசையையத் தரவில்லை. ஏனெனில், கண்டேன் காதல் தந்த அபத்தமான ரீமேக்கின் வலி இன்னும் இருக்கிறது.

ரொக்ஸ்டார் அதிரடியும் ஆர்ப்பாட்டமும் இல்லாத அழகிய சினிமா. ஆழ்ந்து ஆச்சர்யங்களுடன் சங்கமிக்கலாம். கைக்கெட்டிய திமிர். காணாமல் போன காதல். கரைந்து போன இசை, நல்ல சினிமா!!

இலங்கையில் கலாநிதி கலாம் ஜீ; சல்யூட்டுக்கு முன்!


விஞ்ஞானிகளோ, புத்திஜீவிகளோ வெளியிடும் கருத்துக்கள் அனைத்தும் சமூகத்துக்கு பொருத்தமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில தருணங்களில் அப்படி இருப்பதும் இல்லை. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாநிதி அப்துல்கலாம்; இலங்கை- இந்திய மீனவர்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்தும் அப்படித்தான் இருந்தது. புத்திஜீவிகளுக்கான உலகம் பல நேரங்களில் வேறாகவே இருந்து விடுகிறது. அதற்குள் சாமானியன் சென்றுவிட முடிவதில்லை.

கொஞ்சம் ஆரம்பத்திலிருந்து பார்க்கலாம். கலாமின் இலங்கைக்கான விஜயத்தை நான் எதிர்க்க மாட்டேன். ஒரு வகையில் அதனை வரவேற்பேன். எளிய இடத்திலிருந்து அணு விஞ்ஞானி, இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்கிற நிலைக்கு உயர்ந்த கலாமை பலரும் முன்னுதாரணமாக கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலும் அவருக்கான அபிமானிகள் நிறைய இருக்கின்றனர். அதுபோக, மாணவர்களுக்கான முன்னோடியாகவும் பலரினால் கொண்டாடப்படுகின்றார். அப்படிப்பட்ட “கலாமின்“ வருகையை அவ்வளவு பொருத்தமற்ற அரசியல் காரணங்களைக் கூறி எதிர்பதால் பலன்களும் பெரிதாக இல்லை.

இலங்கைக்கான கலாமின் வருகையும், அதன் பின்னராக அதிர்வுகளும் ஓரளவுக்கு இந்திய- இலங்கை உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளில் உணரப்பட்டது. குறிப்பாக, பேஸ்புக்- ருவிற்றர் உள்ளிட்ட சமூகத்தளங்களில். அதுபோக, என்றைக்குமே கலாமினால் மாற்றிவிட முடியாத அரசியல் பிணக்குகள் இலங்கையில் இருக்கின்றன. அவரினால் வெளியிடப்படும் கருத்துக்கள் அவ்வளவு தாக்கம் செலுத்தவும் மாட்டாது. வேண்டுமானால் “இன ஒற்றுமை- மொழிக் கல்வி“ தொடர்பில் அவர் வெளியிடும் கருத்துக்கள் இலங்கை ஊடகங்களுக்கு சில நாட்கள் செய்திகளாகலாம். மற்றப்படி, பெரியதொரு மாற்றங்களை கலாமின் விஜயம் செய்துவிடாது. அதுவொரு, வருகைதரு விரிவுரையாளரின் பல்கலைக்கழக உரை போன்றது.

உலகம் வியந்த விஞ்ஞானியின் வருகையை கொண்டாடுவதற்கு பல்கலைக்கழகங்களுக்கும்- பாடசாலைகளுக்கும் காரணம் இருக்கும். அப்படிப்பட்டதொரு நிலையையே கலாம் ஏற்படுத்தி விட்டுச் சென்றார். கலாமுடன் தமிழ்- முஸ்லிம்- சிங்கள அரசியல் தலைவர்கள் சந்தித்துக் கொண்டதும்- பேசிக் கொண்டதும் கூட மரியாதை நிமிர்த்தமானதே. அப்படியிருக்க, அவரின் விஜயத்தை எதிர்ப்பது அவ்வளவொன்றும் முக்கியம் அல்ல. நிலமை இவ்வாறுதான் இருக்கின்றது. யாழ்ப்பாண ஆசிரியரிடம் கணிதம் கற்றேன் என்பது யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படலாம். அதுவெரு மகிழ்ச்சிப் பரிமாறுதல் மட்டுமே!

ஆனால், போகிற போக்கில் கலாம் ஜீ கூறிவிட்டுச் சென்ற இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் தான் அவரின் ஆளுமை மீது கேள்வியெழுப்ப வைத்திருக்கிறது. அதுவும், வாரத்தில் ஒருநாள் லீவுடன் இருநாட்டு மீனவர்களும் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் தொழிலில் ஈடுபடச் சொல்லி சென்றது எவ்வளவு நகைப்புக்குரியது.

பாக்கு நீரினை கடற்பகுதியும்- அதனைச் சூழவுள்ள இந்து சமூத்திரத்தின் கடற்பகுதிகளிலுமே தொடர்ச்சியான பிரச்சினைகள் இருந்து வருகின்றன. குறிப்பாக, மீனவர்கள் மீதான கடற்படையினரின் தாக்குதலும்- உயிரிழப்புக்களும். இவை, மறுக்க முடியாத- மன்னிக்க முடியாதவை. இவற்றை தீர்ப்பதென்பது இந்திய- இலங்கை அரசாங்கங்கள் இலகுவாக செய்துவிடக் கூடியது. ஆனால், அதற்கு அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்பதுதான் வெளிப்படையான உண்மை. முக்கிய பிரச்சினையின் நிலமை அப்படித்தான் இருக்கிறது.

பாக்குநீரிணையை அண்டிய இலங்கையின் கடற்பகுதியில், இந்திய மீனவர்களின் பாரிய றோலர் படகுகள் இழுவை வலைகளைப் போட்டு மீன்பிடிப்பதே இலங்கை மீனவர்கள் தற்போது எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை. யாழ்ப்பாணம்- மன்னார் உள்ளிட்ட இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் பாரிய ரோலர் படகுகளில் மீன்பிடிப்பதை, வடக்கு மீனவர்களே தடை செய்துள்ளனர். குறித்த இழுவை வலைகளைப் பாவிக்கின்ற போது மீன்விருத்திக்கு துணை நிற்கின்ற பவளப்பாறைகள் அழிக்கப்படுகின்றன என்கிற முக்கிய காரணத்தினால். இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கின்ற நிலை இப்படித்தான் இருக்கின்றது.

சூழ்நிலை இப்படியிருக்க முதல் மூன்று நாட்கள் இந்திய மீனவர்கள்- மற்ற மூன்று நாட்கள் இலங்கை மீனவர்கள் என்று தொழிலில் ஈடுபட்டாலும், இந்திய மீனவர்கள் கொண்டு வருகின்ற பாரிய ரோலர்களும்- இழுவை வலைகளும் பவளப்பாறைகள் (பாக்கு நீரிணை கடற்பகுதி திட்டுக்கள் நிறைந்த ஆழம் குறைந்த பகுதி. நேரடியான சூரிய ஒளி கிடைப்பதால் பிளாந்தன்கள் உள்ளி்ட்ட மீன்களுக்கான கடற்தாவரங்கள் அதிகமாக வளருகின்றன) உள்ளிட்ட மீன்விருத்திக்கு அவசியமானவற்றை அழிக்கத்தான் போகின்றது. அப்படி அழிக்கப்பட்டால், எப்படி மீன் விருத்தி குறித்த கடற்பகுதியில் ஏற்படும்?. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாது கலாம் கருத்து வெளியிட்டிருக்கின்றார். பிரச்சினைகளின் உண்மை நிலைகளை உணர்ந்து தீர்வு யோசனைகளை சொல்லுங்கள் புத்திஜீவிகளே!

மீனவர்கள் மீதான துப்பாக்கிகளின் தாக்குதலை என்றைக்கு நியாயப்படுத்த முடியாது. ஏனெனில், உயிரிழப்புக்களின் வலிகளை தொடர்ச்சியாக உணர்ந்தவர்கள் நாங்கள்!

டொம்மா பாப்பா!


சில பெயர்களுக்கோ- சொற்களுக்கோ அர்த்தம் இருப்பதில்லை. சொல்ல முடிவதில்லை. ஆனால், உணர முடியும். எமக்குள் நாங்களே புதியதொரு அர்த்தத்தை கொடுத்திருப்போம். அப்படி என்னுடன் பல சொற்களும்- புதிய பெயர்களும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. ஒட்டிக்கொண்டவற்றில் “டொம்மா பாப்பா“ என்பது எனக்கு அவ்வளவு பிடித்தமானது.

டொம்மா பாப்பா...!, ரொம்பவும் குழந்தைத்தனத்துடன், கொஞ்சம் ரொமண்டிக் உணர்வும் ஒட்டிக்கொண்டிருப்பது போன்றதொரு வார்த்தையாக நான் உணர ஆரம்பித்து சில காலம் ஆகிறது. இந்த வார்த்தையை முதன்முதலில் உச்சரித்தவர் அதனை இவ்வளவுக்கு உணர்ந்திருப்பாரோ தெரியாது. அவர் கடந்து போகிற தருணத்தில் சொல்லிட்டு போனது. சிலவேளை வாய் தவறிக்கூட உச்சரித்திருக்கலாம். ஆனால், என்னில் ஒட்டிக்கொண்டு அதிகம் ரசிக்க வைத்த சொல் அது. இப்படி தெளிவான அர்த்தமும்- வடிவமும் இல்லாத சொற்களை வாழ்க்கை முழுவதும் ஆங்காங்கே பயன்படுத்தி வருவோம். அதுவும், குறிப்பிட்ட சில சொற்கள் ஒருவரை அடையாளப்படுத்தவே நாங்கள் பாவிப்போம். அதில் கூட அவ்வளவு ஈர்ப்பும்- ரசனையும் இருக்கிறது.

நாங்கள் வாழும் சூழலும்- வாழ்வு முறையும் கூட இப்படியான சொற்களின் தோற்றத்திலும் பயன்பாட்டிலும் தாக்கம் செலுத்துகின்றன. அதுபோல, எம்முடன் பிணைந்து விட்ட நினைவுகளும்- சம்பவங்களும் கூட. ஆக, இப்படியான சரியான வடிவமற்ற சொற்களின் தோற்றத்திலும்- பயன்பாட்டிலும் பல காரணங்கள் இருக்கலாம். அதனைப் பலருக்கு புரிய வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. சம்பந்தப்பட்ட நபர்களுக்குள் மட்டுமே அந்த சொற்களின் பாவனை அதிகமாக இருக்கும்.

தாய்க்கும்- குழந்தைக்குமான பேச்சுக்களில் பாவிக்கப்படும் சொற்களில் பெரும்பான்மையானவற்றுக்கு அர்த்தம் இருப்பதில்லை. ஆனால், நிறைந்த பாசமும்- உணர்வும் கலந்திருக்கும். அதுபோல, காதலன்- காதலிக்கிடையினால பேச்சுக்களின் போதும் நிறைய இம்மாதிரியான சொற்களின் பாவனை இருக்கும். பேசி முடித்தபின்னர் சொற்களின் அர்த்தத்தைத் தேடினால் புரிபாடாமல் இருக்கும். ஆனால், அந்த உணர்வு மட்டும் அவர்களுடன் பயணப்பட ஆரம்பித்திருக்கும். அதுபோல, நண்பர்களுக்கிடையிலும். சில விடயங்களை ரசனை- உணர்வு என்கிற வரையறைக்குள் வைத்து அணுகவேண்டியிருக்கிறது. அதற்கு, வடிவமும்- வரையறையும் அவ்வளவு தேவையிருப்பதில்லை. அப்படித்தான் உணர்கிறேன் நான்.

“புச்சுக்குட்டி, ஜில்லுக்கண்ணு, கரடிக்குட்டி, புச்சிம்மா, பம்பிளிமாஸ்“ இப்படியான பல சொற்கள் குழந்தைகளையும்- காதலன் காதலியையும் செல்லமாக அழைக்க பயன்படும் சொற்கள். இவற்றுக்கு அர்த்தம் பெரிதாக இருப்பதில்லை. சிலவேளை அந்த அர்த்தம் ரொம்பவும் எதிர்மாறாக இருக்கும். காதலியொருத்தி காதலனை நோக்கி “கரடிக்குட்டி“ என்று சொல்வதை எந்த தருணத்திலும் அவமானப்படுத்தலாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்குள் வேறுவகையான ரொமாண்டிக் உணர்வு கலந்திருக்கும். இப்படித்தான் பொருத்தமற்ற அர்த்தங்களுடனும்- உணர்வுடனும் எமக்கிடையில் பல சொற்கள் பாவிக்கப்படுகின்றன. ஆனாலும், அதற்கான அழகியலுடன்.

மொழிகளின் உருவாக்கம் என்பது காலம் காலமாக வளர்ச்சி பெற்று (?) அல்லது காலத்துக்கு ஏற்ப வடிவம் பெற்று வருவது. ஆனால், அதன் பயன்பாடு என்பது சனக்குழுமங்களின் பரம்பல் மற்றும் வாழ்வியல் மாற்றங்களுடன் இணங்கிப்போவது. அந்த இணக்கப்பாடும் கூட புதிய மொழியொன்றின் தோற்றத்தில் தாக்கம் செலுத்த வல்லது. தாய் மொழியிலிருந்து பிரிகிற கிள்ளை மொழிகள் மாதிரி. ஆனால், இந்த “டொம்மா பாப்பா“ வகையாறா சொற்கள் மொழி வடிவத்தின் மீது அவ்வளவு தாக்கத்தை செலுத்தி விடாது. ஆனால், சம்பந்தப்பட்ட ஆன்மாக்களுடன் நிறையவே பிணைந்திருக்கும்! டொம்மா பாப்பாவுக்குள் நான் சிக்கியிருப்பது மாதிரியே!!

படம்: Madhu India Photography தளத்தில் எடுக்கப்பட்டது.